search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிண்டரை வெடித்து மனைவி"

    மதுரையில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் வியாபாரி, மனைவி மகளுடன் பலியானார். சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.
    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகர், பாலாஜி நகர் லட்சுமி தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 38), சாக்லெட், முருக்கு போன்ற திண்பண்டங்களை மொத்தமாக வாங்கி, சிறு கடைகளுக்கு வினியோகித்து வந்தார்.

    இவருடைய மனைவி காஞ்சனா (30), மகள் அக்சயா (6). தனியார் பள்ளியில் அக்சயா 1-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் காம்பவுண்டு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

    நேற்று இரவு ராமமூர்த்தி குடும்பத்தினருடன் வீட்டில் படுத்திருந்தார். இன்று அதிகாலை 3 மணிக்கு அவரது வீட்டில் இருந்து திடீரென வெடிச்சத்தம் கேட்டது.

    இதனைத் தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் வேகமாக தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது ராமமூர்த்தி, உடல் எரிந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

    கியாஸ் சிலிண்டர் வெடித்து விட்டதாக அலறினார். அவரை அக்கம், பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ராம மூர்த்தி இறந்து விட்டார்.

    சம்பவம் குறித்து அறிந்த திடீர் நகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீ பக்கத்து வீடுகளுக்கு பரவாத வகையில் அணைத்தனர்.

    திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு காஞ்சனா மற்றும் அவரது மகள் அக்சயா படுக்கையில் உடல் கருகி பிணமாக கிடந்தனர்.

    அவர்களது உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிலிண்டர் வெடித்ததாக ராமமூர்த்தி கூறிய நிலையில் படுக்கை அறைக்குள் 2 சிலிண்டர்களுக்கும் திறந்த நிலையில் கிடந்துள்ளது.

    இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமையல் அறையில் இருக்க வேண்டிய 2 சிலிண்டர்களும் படுக்கை அறைக்கு வந்தது எப்படி? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமமூர்த்தி தான் சிலிண்டரை வெடிக்க வைத்து மனைவி, மகளை கொன்றிருக்கலாம். அப்போது அவரது உடலில் தீப்பிடித்ததால் அலறியபடி வெளியே வந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக ராமமூர்த்திக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2 மாதமாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை.

    இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    எனவே ராமமூர்த்தி குடும்பத்தினரோடு தற்கொலை செய்தாரா? அல்லது மனைவி, மகளை கொன்று விட்டு தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமமூர்த்தியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை ஆகும். அவரது மனைவி காஞ்சனா. கோவில்பட்டியைச் சேர்ந்தவர்.

    கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு தான் அவர்கள் மதுரை திருநகருக்கு குடிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





    ×